Wednesday, 3 September 2014

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை, செப்.4-ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர். விஜயகாந்த் தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தற்போது போராட்டம் நடத்தி வரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. ரத்து செய்ய வேண்டும்பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார். டாக்டர் ராமதாஸ்பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள். அதே நேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது. தமிழக அரசு நடவடிக்கைஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment