Saturday, 16 August 2014

31 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி - தினமணி

தமிழகத்தில் 31 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக காலியாக உள்ளன என்று பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதம் நடத்த வேண்டிய பேராசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வும் காலதாமதமாகி வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 40 கல்லூரிகள் கிரேடு-1 கல்லூரிகளாகும். மீதமுள்ள 41 கல்லூரிகளும் கிரேடு-2 கல்லூரிகள்.

இதில் கடந்த ஜூன் மாதம், 31 கிரேடு-2 கல்லூரிகளில் பணியாற்றிவந்த முதல்வர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கிரேடு-1 கல்லூரி முதல்வர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

இதன் காரணமாக 31 கிரேடு-2 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியானது. இந்தப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறியது:

காலியாக உள்ள 31 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப, முதலில் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் ஆட்சேபனைகள் வரவேற்கப்படவேண்டும். ஆனால், பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்படுவது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் பேராசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதோடு, முதல்வர் பணியிடங்களை நிரப்ப மேலும் சில மாதங்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாமதம் காரணமாக, ஜூலை மாதம் நடத்தப்பட வேண்டிய பேராசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு காலதாமதமாகி வருகிறது. இதனால், பணி மாறுதலுக்காகக் காத்திருக்கும் பேராசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்கக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, முதல்வர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவதோடு, பணிமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என்றார்.

0 comments:

Post a Comment