சென்னை, ஆக.2-சோழிங்கநல்லூர்-காரப்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ.95 கோடியில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாக கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உயர்கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ரூ.95 கோடியில் பல்கலைக்கழக கட்டிட வளாகம்* 665 கல்வியியல் கல்லூரிகளின் இணைப்புடன், ஆராய்ச்சிப்பட்டப்படிப்பினையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தற்காலிகமாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் கல்லு£ரி வளாகத்தில் மிகுந்த இட நெருக்கடிக்கிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இட நெருக்கடியை களையும் பொருட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்கலைக்கழகத்திற்கான கல்வியியல் வளாகமும் நிர்வாக வளாகமும் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.*மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க, மயிலாடுதுறையில் ‘மணல்மேடு’ என்னுமிடத்தில் புதியதாக இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டு முதல் துவங்கப்படும்.மாணவியர் விடுதிகள்*பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் பயிலும் இளநிலை மாணவ, மாணவியர்களுக்கென புதிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; குரோம்பேட்டை, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-க்கு என நிர்வாகக் கட்டிடம் மற்றும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்கென புதிய விடுதிக்கட்டிடங்கள் ஆகியவை 30 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். 1,112 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்*2013-14-ம் கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும். *திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல், கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மண்டல அலுவலகங்களில் அதிக மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்; ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். மேலும் கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை இரண்டாகப்பிரித்து, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தர்மபுரியில் ஒரு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இவ்வலுவலகம் அரசுக்கலை கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும். இதற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினம் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் ஆகும்.*இந்தியாவின் அறிவுத்தலைநகரமாகவும், புதுமைத்தளமாகவும் தமிழகத்தை மாற்றுவது தான் எனது அரசின் குறிக்கோளாகும். தற்போதுள்ள எண்ணியல் தொழில்நுட்பயுகத்தில், உயர் கல்வித்துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப்பொருள்களை இணைய தளம் மூலம் இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணைய தள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்- நூல்கள், மின்-இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை, மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து எளிதில் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். அனைத்து பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்த களஞ்சியத்துடன் இணைக்கப்படும். உலகளாவிய அறிவு வளங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் இத்திட்டம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.புதிய பாடப்பிரிவுகள்*தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் 93 அரசு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. தற்போது திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களில் அதிக வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டும் பணியாளர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நல்லதொரு சூழ்நிலையில் பணி புரிவதற்கென இம்மூன்று அலுவலகங்களுக்கும் மொத்தமாக 24,300 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.*2014-15-ம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில் பாடப்பிரிவுகள் மற்றும் 52 பி.எச்.டி. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப்பிரிவுகள்அறிமுகப்படுத்தப்படும்என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment