Friday, 17 October 2014

நிர்பய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி | கோப்புப் படம்: டி.ஆர்.டி.ஒ.
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 'நிர்பய் ஏவுகணை'யை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில்,
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்பய் ஏவுகணை உருவாக்கப்பட்டது.
அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு, நிலத்தில் இருந்து 700 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல இந்த ஏவுகணை, ஒடிஸாவின் பாலாசோரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
நிலம், போர் விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றில் இருந்து தாக்கக்கூடிய வகையில் நிர்பய் ஏவுகணைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் நிலத்தில் இருந்து தாக்கக் கூடிய வகையில் இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டது.
இந்த வகையிலான ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட சற்று குறைவான வேகத்தில் (சப்-சோனிக்), 1,500 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியவையாகும்.
முன்னதாக நிர்பய் சோதனை முயற்சி கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment