Saturday, 11 October 2014

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது எப்படி? தினமலர் 'ஜெயித்துக்காட்டுவோம்'; ஆசிரியர்கள் 'அட்வைஸ்'

மேட்டுப்பாளையம் : பத்தாம் வகுப்பு அரசு தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளை, மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த 'தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையத்தில், 'தினமலர் -- கல்வி மலர்', டி.வி.ஆர்., அகாடமியுடன் இணைந்தும், கோவை நேரு கல்வி நிறுவனம், மத்தம்பாளையம் கே.டி.வி.ஆர்., கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை நடத்தியது. இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், நேற்று காலை பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கான தேர்வு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். காரமடை வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

ஆசிரியர் சுவாமி நாதன், காரமடை வித்யா விகாஷ் பள்ளி: தமிழில், திருக்குறள் கேள்விகளை நன்கு படிக்க வேண்டும். ஒரு மதிப் பெண் வினாக்களை படித்து முழுமையாக எழுதி முழு மதிப்பெண்களை பெற வேண்டும். இலக்கண வினாக்கள் எழுதும் போது, முக்கிய வார்த்தை, எழுத்து ஆகியவற்றை 'கருப்பு மையால்' அடிக்கோடு போடவும். மொழி பெயர்த்தல் கேள்விக்கு, நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம் செய்யாமல், நன்கு புரிந்து கொண்டு வாக்கிய வடிவில் எழுத வேண்டும். கடிதம் எழுதும் போது, கமா, புள்ளி, உரையின் மேல் முகவரி ஆகியவை சரியாக எழுதி, 10 மதிப்பெண்கள் பெற வேண்டும். கட்டுரை எழுதும் போது உபதலைப்பு போட்டு, அதற்கு அடிக்கோடு போட வேண்டும்.

ஆங்கிலம் மூர்த்தி: ஆங்கிலப் பாடத்தில், 'பேராகிராப்' வினாக்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். வார்த்தையை வைத்து வாக்கியம் எழுதும் கேள்வியை நன்கு படித்து அர்த்தம் புரிந்தபிறகு விடை எழுத வேண்டும். பொருத்துக பிரிவில் கேள்வி வார்த்தையை எழுதி, அதற்கு நேராக விடை எழுத வேண்டும். உரையாடல் கேள்விக்கு, எளிய முறையில் கேள்வி, பதில் எழுதவேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகளை நன்கு படிக்கவும்.

ஆசிரியை மலர்விழி: கணிதப்பாடத்தில் கணங்கள், அணிகள், வடிவியல், அளவியல், செய்முறை வடிவியல், வரைபடம் ஆகிய பாடங்களில் உள்ள கணக்குகளை, போட்டு பயிற்சி பெற்றால் 80 மதிப்பெண்கள் பெற்று விடலாம். சூத்திரங்களை சிறிய தாளில் எழுதி வைத்து, ஓய்வு நேரத்தில் படித்து நினைவில் வைக்க வேண்டும். நிறைய பொதுத்தேர்வு கேள்வித் தாள்களை வைத்து, நீங்களாக சுயமாக தேர்வு எழுதி, அதை ஆசிரியர்களிடம் கொடுத்து திருத்திய பிறகு, அதில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும்.

ஆசிரியை சுஜாதா: எந்த வினாவிற்கு விதிகள் தேவையோ, அதற்கு அவசியம் எழுத வேண்டும். வேதிச் சமன்பாடுகளை கட்டம் போட்டு காட்ட வேண்டும். அமிலங்கள், காரங்களின் பயன்கள் குறித்த கேள்வி அடிக்கடி வருவதால், அதை நன்றாக படிக்க வேண்டும். தேவையான இடத்தில் உதாரணம் காட்ட வேண்டும். புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண்கள் கேள்விகளை நன்கு படிக்க வேண்டும். படங்களை வரைந்தால், அதில் பாகங்கள் குறிக்க வேண்டும்.

ஆசிரியை அமலா: ஒரு மதிப்பெண் கள் வினாக்களை திரும்ப, திரும்ப படிக்க வேண்டும். காரணம் கூறுதலும், உறுதிப்படுத்தும் வினாவும் தொடர்ந்து வருவதால், அதை நன்கு படிக்க வேண்டும். ஓய்வு கிடைக்கும் போது படங்களை வரைந்து பார்க்க வேண் டும். தலைப்பு போட்டு படம் வரைய பழக வேண் டும். பெரிய வினாவை குறிப்பு எடுத்து படிக்க வேண்டும்.

ஆசிரியர் இளங்கோவன்: வரலாற்றுப்பாடத்தில் பெரிய கேள்வி எழுதும் போது, அவசியம் ஆண்டுகளை குறிப்பிட வேண்டும். தேவையான வினாவுக்கு, 'டையகிராம்' போட வேண்டும். மேப்பில் முழு மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி எடுக்க வேண்டும். மேப்பில் கேள்வி எண்ணை எழுதவும். ஒரு வினாவின் கடைசி இரு வரிகளை அடுத்த பேப்பரில் எழுதுவதை தவிர்க்க வேண்டும். முதல், இரண் டாம் உலகப்போர் கேள்விகள் தொடர்ந்து கேட்பதால், அந்த இரு வினாக்களை நன்கு படிக்க வேண்டும்.

பிளஸ் 2 மாணவர்களே... இன்று மிஸ் பண்ணிடாதீங்க!
மேட்டுப்பாளையத்தில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'தினமலர் -- கல்விமலர்' நடத்தும் 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நடக்கிறது.'தினமலர்-- கல்வி மலர்', 'டி.வி.ஆர்., அகாடமி' யுடன் இணைந்து, கோவை நேரு கல்வி நிறுவனம், மத்தம்பாளையம் கே.டி.வி.ஆர்., ஆகிய கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், மேட்டுப்பாளையத்தில் 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், இன்று காலை 9.00 மணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் 1.00 மணிக்கு கலைப்பிரிவு மாணவர்களுக்கும் தேர்வு ஆலோசனை வழங்கப்படுகிறது. காரமடை வித்யா விகாஷ் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பவர் பாயின்ட் முறையில், ஆலோசனை வழங்குகின்றனர்.

0 comments:

Post a Comment