Monday, 10 November 2014

சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் பரிபூரணமாக உழைக்கவேண்டும் : அறிவியல் ஆலோசகர் தகவல்

சிவகங்கை: ''ஆசிரியர்கள் பரிபூரணமாக உழைத்தால் மட்டுமே, சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அப்போது தான் நாட்டில் வருங்கால சந்ததிகள் சிறப்பாக இருக்க முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.



சிவகங்கை சமுதாயக்கல்லூரியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: இளம் வயதில் கற்கும் நல்ல பழக்கங்கள் தான் கடைசி வரை காப்பாற்றும். அந்த வகையில், ஒரு மனிதன் நல்ல தலைவராக, அறிஞராக, விஞ்ஞானியாக உருவாக வேண்டுமெனில் குழந்தை பருவத்தில் இருந்தே அவருக்கு 3 நபர்கள் வழிகாட்ட வேண்டும். முதல் 2 நபர்கள் தாய், தந்தை, மூன்றாவது நபர் தொடக்க பள்ளி ஆசிரியர் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க துவங்கும் முன், மாணவர்களை ஒருமுகப்படுத்த நீதி போதனைகளை கற்பிக்கவேண்டும். பின்னர் பாடங்களை எடுத்தால் எளிதில் அவர்களுக்கு புரியும். ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது 75 சதவீதம் கவனித்தால் போதும் மாணவர்கள் டியூசன், வீட்டில் கூட படிக்க தேவையில்லை. இந்தியாவில் தொடக்க பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். உயர்கல்விக்கு செல்வது என்னவோ 14 சதவீதம் தான்.
தொடக்க கல்வி தான் மாணவர்களிடத்தில் நம்பிக்கை, ஆற்றல், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டும்.அப்போது தான் எதிர்கால சமுதாயம் நல்லபடியாக அமையும்.
ஆசிரியர்கள் பரிபூரணமாக உழைத்தால் மட்டுமே, சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அப்போது தான் நாட்டில் வருங்கால சந்ததிகள் சிறப்பாக இருக்க முடியும், என்றார்.

0 comments:

Post a Comment