Monday, 10 November 2014

பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயதுக் குழந்தை சாவு

சோழவரம் அருகே பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்ட ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஜோதி. இத்தம்பதிக்கு வர்ஷனா (4), வர்ஷன் (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில் வர்ஷனா, செங்குன்றம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். இப்பள்ளி பேருந்து நாள்தோறும் ஆங்காடு கிராமத்துக்கு வந்து மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.
அதேபோல், திங்கள்கிழமை காலை, ஆங்காடு கிராமத்துக்கு வந்த பள்ளிப் பேருந்தில் வர்ஷனாவை அவரது தாய் ஜோதி அமர வைத்துள்ளார். அப்போது ஜோதி அருகில் நின்று கொண்டிருந்த அவரது மற்றொரு மகன் வர்ஷன் பேருந்தின் அடியில் சென்று உள்ளார்.
இதைக் கவனிக்காத பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி வர்ஷன் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தனர்.
பிறகு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அக்கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும் இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர் மோகனகிருஷ்ணன் (34) சோழவரம் போலீஸார் கைது செய்தனர்.

0 comments:

Post a Comment