Monday, 6 October 2014

செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்

பெங்களூர்,
மங்கள்யான் அனுப்பிய புகைப்படம் மூலம், செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயின், மேற்பரப்பு மற்றும் கனிம வளங்களை ஆய்வு செய்யவும், மீத்தேன் வாயு குறித்த ஆய்வுக்காகவும் மங்கள்யான் விண்கலம் அனுப்பப்பட்டது. சுமார் 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்த இந்த விண்கலம், கடந்த 24-ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் எவ்வித பிரச்சினையுமின்றி சுற்றிவரும் மங்கள்யான் விண்கலம், குறைந்தபட்சம் 6 மாதங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்து, செவ்வாய் கிரகம் தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்பி வைக்கும்.

மங்கள்யான் விண்கலம் கடந்த 25-ந் தேதி செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.  மங்கள்யானில் உள்ள நவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த படங்களை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் இஸ்ரோவின் 'பேஸ்புக்' பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுக்கு பயனுள்ள படங்கள் மற்றும் தகவல்களை மங்கள்யான் விண்கலம் அளித்து வருவதால், இஸ்ரோ அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment